19 சீன கடவுச்சீட்டுகளுடன் கைதான முக்கிய அதிகாரி : தலைமறைவாகிய இளம்பெண்!!

77

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி, 19 சீன பிரஜைகளின் கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக தக்கவைத்து, அவற்றை மீள வழங்குவதற்காக பணம் கோரியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இளம் பெண்ணை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி ஒருவர், ஏற்கனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மத்திய குற்றப்புலனாய்வு பணியகத்தின் (CCIB) பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) கமல் ஆரியவன்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

19 சீன பிரஜைகளின் கடவுச்சீட்டுகளை மையமாகக் கொண்டதாகக் கூறப்படும் இலஞ்சம் மற்றும் பணப்பறிப்பு நடவடிக்கையில் குறித்த பெண் இடைத்தரகராக செயல்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதேவளை, “அவர் முன்பே பொலிஸில் சரணடையுமாறு அறிவிக்கப்பட்டிருந்தார். எனினும், பொலிஸார் அவரது வீட்டிற்குச் சென்றபோது அது பூட்டப்பட்டிருந்தது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையாளர்களின் தகவலின்படி, சீனப் பிரஜைகளுக்கும் பொறுப்பதிகாரிக்கும் இடையே தொடர்பாளராகச் செயல்பட்ட அந்தப் பெண், கடவுச்சீட்டுகளை மீளப் பெறுவதற்காக கோரப்பட்ட பணத்தை வசூலிப்பதில் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு கடவுச்சீட்டிற்கும் ரூ.300,000 வீதம் அறவிடப்பட்டதாகவும், இதன் மூலம் 19 கடவுச்சீட்டுகளுக்காக ரூ.5.7 மில்லியனுக்கும் அதிகமான தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தரவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.