தேர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

27

தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கல்லூரி மாணவர் குடும்பத்திற்கு முதல்வர் விஜய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

ரதவீதியில் தேர் திரும்பும் போது, தேரின் சக்கரத்திற்கும், அங்கிருந்த சுவருக்கும் நடுவே கல்லூரி மாணவர்கள் இருவர் சிக்கிக்கொண்டனர்.

இதில், கோவிந்தராஜா என்பவரின் மகனான ஹர்ஷவர்தன் என்ற 18 வயதான முதலாமாண்டு பொறியியல் கல்லூரி மாணவர், பலத்த காயம் அடைந்து முதலுதவி சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

கௌரிசங்கர் என்பவரின் மகனான சஷ்டிகன் என்ற மற்றொரு மாணவர், கடுமையான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமைச்சர் அருண்ராஜ் மருத்துவமனைக்கு நேரில் சென்று, உயிரிழந்த ஹர்ஷவர்தனின் குடுமபத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த ஹர்ஷவர்தனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், சஷ்டிகனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.