இந்த அறிகுறிகளுடன் இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு எச்சரிக்கை!!

26

பருவமழையை தொடர்ந்து இலங்கையில் டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் மற்றும் உரிய இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வைத்தியர் மகேஷக விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்துள்ளதாகவும், குறிப்பாக மேற்கு மாகாணம், அதிலும் கொழும்பு மற்றும் கம்பஹாவில் அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் எச்சரித்துள்ளார். “டெங்கு மற்றும் சிக்கன்குனியா ஆகிய இரண்டுமே ஏடிஸ் கொசுக்களால் பரவுகின்றன.

மேலும், காய்ச்சல், தலைவலி, உடல் வலி, மூட்டு வலி மற்றும் தோல் தடிப்புகள் போன்ற ஒரே மாதிரியான அறிகுறிகளுடன் இவை பெரும்பாலும் ஏற்படுவதால் ஆரம்பத்திலேயே நோயைக்கண்டறிவது கடினம் என்றும் கூறியுள்ளார்.

டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (Dengue Haemorrhagic Fever – DHF) முற்றிய நிலையில், அது உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடும் என்றும், உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இரத்தக்கசிவு, அதிர்ச்சி மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

“டெங்கு இரத்தக் கசிவு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, காய்ச்சல் குறையத் தொடங்கும் போது உடல்நிலை மேலும் மோசமடைகிறது.

சோர்வு, வயிற்று வலி மற்றும் கைகள் அல்லது பாதங்கள் குளிர்ச்சியாக இருப்பது போன்ற அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது,” என்றும் வைத்தியர் விஜயவர்தன அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், காய்ச்சல் ஏற்படும் நோயாளிகள் அழற்சி எதிர்ப்பு மருந்துகளை (NSAIDs) ஆரம்பத்திலேயே பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், இவை டெங்கு பாதிப்புகளில் இரத்தக் கசிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என அறிவுறுத்தியுள்ளார்.

நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றவும், நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்தவும், தொடர் மழையால் நோய் பரவும் அபாயம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் விழிப்புடன் இருக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.