இலங்கையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பரிதாபமாக பலியான தமிழ்க் குடும்பம்!!

124

கண்டி, நாவலப்பிட்டியில் நேற்று ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

மாப்பாகந்த பகுதியில் இருந்து நாவலபிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் மாணவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

பாடசாலை மாணவனுடன் அவரது தாயாரும் மற்றொரு பெண்ணும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவலபிட்டி கல்பட தமிழ் மகா வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் சுரேஷ் சந்திரன், 42 வயதுடைய அவரது தாயாரான கவிதா மற்றும் 57 வயதான அயல்வீட்டு பெண் பாக்கியநாதன் ஜெனி ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். உயிரிழந்த மூவரும் நாவலபிட்டிய வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த போதே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

முச்சக்கர வண்டி மீது முறிந்து விழுந்த மரம் மிகவும் பழைமையான மற்றும் உக்கிய நிலையில் காணப்பட்டுள்ளது. குறித்த மரத்தை வெட்டி அகற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அது செய்யப்படாததாலேயே இந்த விபத்து நேரிட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.