வைத்தியசாலையில் அலட்சியத்தால் தாயும் சிசுவும் மரணம் : வைத்தியர்கள் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு!!

103

மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாயும் அவரின் பிறந்த பெண் சிசுவும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஹசலக, மினிப்பே பகுதியை சேர்ந்த 42 வயதுடைய எச். எம். ஸ்வர்ணமலா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஆடைத் தொழிற்சாலை ஊழியராகப் பணிபுரிந்துள்ளார்.

மூன்றாவது பிரசவத்திற்காக கடந்த 25 ஆம் திகதி மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அவர், அனுமதிக்கப்பட்டார். 26 ஆம் திகதி முற்பகல் 11.00 மணியளவில் பெண் குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார்.

சிசேரியன் மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்ட பின்னர், தாயின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது. உடனடியாக அவர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 06 ஆம் திகதி அதிகாலை 5.45 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.

மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் அலட்சியப் போக்கினாலேயே இந்த 2 மரணங்களும் சம்பவித்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் கணவரான சுமித் பண்டார உள்ளிட்ட உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை வழமைக்கு மாறாக அதிக வளர்ச்சியடைந்திருந்ததால் அவருக்கு ஆரம்பத்தில் சிகிச்சையளித்த மருத்துவர்கள் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமே பிரசவத்தை மேற்கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்திருந்தனர்.

அவ்வாறிருந்தும், அவர் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அங்குள்ள மருத்துவர்கள் சாதாரண பிரசவமாக அதனை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.

சாதாரண பிரசவ முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, இறுதித் தருணத்திலேயே சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாகவும், வைத்தியர்களின் அலட்சியத்தாலேயே இந்த இரண்டு மரணங்களும் நிகழ்ந்துள்ளதாகவும் உறவினர்கள் கடுமையாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.