
பொலநறுவையில் கையடக்க தொலைபேசி காரணமாக ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி மீது கணவன் தாக்குதல் நடத்தியுள்ளார்.
தம்பால பகுதியில் கணவன் அயல் வீட்டிலிருந்து திருடி வந்த கையடக்க தொலைபேசியை, மனைவி மீண்டும் ஒப்படைக்க சென்றமையால் ஏற்பட்ட தகராறு முற்றியதில், கணவன் தனது மனைவியின் இரண்டு கைகளையும் கத்தியால் வெட்டியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. பலத்த காயமடைந்த 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் பொலநறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைகளுக்கமைய, சந்தேக நபரான கணவன் அயல் வீட்டிலிருந்து கையடக்க தொலைபேசி ஒன்றை திருடி, அதனை விற்பனை செய்ய முயற்சித்துள்ளார்.
இதனை அறிந்த மனைவி, அந்த தொலைபேசியை மீண்டும் உரிய வீட்டிலேயே ஒப்படைத்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து, கோபமடைந்த கணவன் மனைவியின் இரு கைகளையும் கத்தியால் வெட்டியுள்ளார்.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 35 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்




