
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (10) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (11) காலை 10.30 மணி வரை 24 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்குப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமைகள் குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது
அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடுவதுடன், அக்கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
எனவே, மறுஅறிவித்தல் வரும் வரை இந்த கடற்பரப்புகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையிலும், கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்
வரையிலுமான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
அத்துடன், மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் 2 – 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன.
எனவே பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




