வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

18

இலங்கையில், இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் கணிசமாக உயரக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) எச்சரித்துள்ளது.

பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் சுங்க மதிப்பை நிர்ணயிக்கும்போது முன்னர் வழங்கப்பட்டு வந்த 15 சதவீத மதிப்பீட்டுக்குறைப்பு நீக்கப்பட்டதை தொடர்ந்து இந்த தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்கம் சந்தை முழுவதும் உணரப்படும் என்றும், பிரபலமான வாகன வகைகளின் விலைகள் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் VIASL-இன் துணைத்தலைவரும், செய்தித் தொடர்பாளருமான அரோஷா ரொத்ரிகோ கூறியுள்ளார்.

ஹொண்டா வெசல் Z பிளே SUV போன்றவை வேகமாக விற்பனையாகும் வகை என்றும், அவற்றின் விலை சுமார் 2 மில்லியன் வரை உயரக்கூடும், அதே நேரத்தில் சுசுகி வேகன் R-இன் விலை ஏறத்தாழ ரூ. 700,000 வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் சுங்க மதிப்பீட்டு முறைகளில் செய்யப்பட்ட மாற்றங்களே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று ரொத்ரிகோ கூறியுள்ளார்.

மோட்டார் வாகனங்களின் சுங்க மதிப்பை நிர்ணயிப்பதற்கு இரண்டு தனித்துவமான முறைகளை, 2016 ஜூன் 14 திகதியிட்ட வர்த்தமானி எண் 1971/10 பரிந்துரைக்கிறது என சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிவு 1(A) புத்தம் புதிய மோட்டார் வாகனங்களுக்கும், பிரிவு 1(B) பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் உட்பட மற்ற அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு 15 சதவீத சலுகை வழங்கப்படுவதாகவும், இறக்குமதி விதிமுறைகளின் கீழ் தகுதி பெறுவதற்காக புத்தம் புதிய வாகனங்கள் முதலில் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டு,

பின்னர் பயன்படுத்தப்பட்ட வாகனங்களாக ஏற்றுமதி செய்யப்படும்போது அரசாங்கம் வருவாய் இழப்பைச் சந்திப்பதாகவும் மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பெரிய அளவிலான ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும் மொத்த கொள்முதல் தள்ளுபடிகள், சில்லறை விலைகளில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ள டீலர் லாப வரம்புகள், உள்ளூர் வரிகள் மற்றும் இதர செலவுகள்,

மற்றும் சர்வதேச வணிகப் பரிவர்த்தனைகளில் பொதுவான வணிக விலை பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றின் காரணமாக, பட்டியலிடப்பட்ட சில்லறை விலைகள் பெரும்பாலும் இறுதி கொள்முதல் விலையை பிரதிபலிப்பதில்லை என்பதை அமைச்சகம் உணர்ந்திருந்தது.

இந்த குறைப்பை நீக்குவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து எச்சரித்த சங்கம், உயர்ந்த சுங்க மதிப்புகள் இறக்குமதி வரிகள் மற்றும் தீர்வைகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்றும், இது இறுதியில் நுகர்வோருக்கான வாகன விலைகளை உயர்த்தும் என்றும் கூறியுள்ளது.

இந்த முடிவு, வாகனங்களை வாங்கும் திறனிலும் இலங்கையின் வாகன இறக்குமதித் துறையின் மீட்சியிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், முடிவை அதிகாரிகள் கவனமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.