இலங்கையில் பெற்றோரை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் பறிமுதல் : வருகின்றது புதிய சட்டம்!!

14

இலங்கையில் வயதான பெற்றோர்கள் தங்களது சொத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதிய பின்னர், அவர்கள் பிள்ளைகளால் கைவிடப்படும் பட்சத்தில்,

அந்த சொத்துக்களை அரசாங்கம் தனது பொறுப்பில் எடுப்பதற்கான புதிய சட்டங்களைக் கொண்டு வர அரசாங்கம் தயாராகி வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்படும் சொத்துக்கள், பாதிக்கப்பட்ட அந்த முதியவர்களின் நலன்புரிச் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தெரிவிக்கையில்,

பல பெற்றோர்கள் தங்களது முதுமைக் காலத்தில் பிள்ளைகள் தங்களை அரவணைத்துக் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையிலேயே சொத்துக்களை பிள்ளைகளின் பெயருக்கு மாற்றுகிறார்கள்.

சொத்துக்கள் கைக்கு வந்தவுடன் வயதான பெற்றோரைக் கைவிடுகின்ற அல்லது அவர்களுக்கு எந்தவித ஆதரவும் வழங்காமல் நடுத்தெருவில் விடுகின்ற ஏராளமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ”

பிள்ளைகள் தங்களது பெற்றோரைக் கைவிட்டுவிட்டு, அவர்களின் சொத்துக்களை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முற்றிலும் ஒழுக்கமற்ற செயலாகும். பிள்ளைகள் தங்களைக் கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் பெற்றோர்கள் சொத்துக்களை மாற்றுகிறார்கள்.

ஆனால் சில பிள்ளைகாள் பெற்றொரின் நம்பிக்கையினை காப்பாற்றுவதில்லை இந்த விவகாரத்திற்குத் தீர்வுகாண்பதற்கான தேவையான சட்டமூலங்களை வரைவாக்கம் செய்யும் பணிகளில் தற்போது அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இந்த முன்மொழியப்பட்ட புதிய சட்டக் கட்டமைப்பின் கீழ், இவ்வாறான சூழ்நிலைகளில் பிள்ளைகளுக்கு மாற்றப்பட்ட சொத்துக்கள், சட்டப்பூர்வமாக அரசாங்கத்தின் காவல் அல்லது பொறுப்பின் கீழ் கொண்டுவரப்படும்.

அந்த சொத்துக்கள் மூலம் ஈட்டப்படும் வருமானம் அல்லது நிதியானது, பாதிக்கப்பட்ட பெற்றோரின் நலன்புரிச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்படும்.

கைவிடப்பட்ட முதியவர்களைப் பராமரிப்பதற்காகப் பராமரிப்பாளர்களை நியமிக்க அல்லது தேவைப்படின் அவர்களைத் தரமான முதியோர் இல்லங்களில் சேர்ப்பதற்கான கட்டணங்களை இந்த நிதியின் மூலம் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்படும்.

அதேவேளை இலங்கையில் வேகமாக அதிகரித்து வரும் முதியோர்களின் சனத்தொகை, நாட்டின் சமூக நலன்புரி அமைப்பிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

பல வருடங்களாக தனியாக அல்லது போதிய குடும்ப ஆதரவின்றி வாழும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்,

சிரேஷ்ட பிரஜைகளுக்கான வலுவான சட்டப் பாதுகாப்புகள் மற்றும் மேம்பட்ட சமூகப் பாதுகாப்பு வழிமுறைகளுக்கான கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, நாட்டில் இயங்கி வரும் முதியோர் இல்லங்களின் தரம் மற்றும் நலன்புரி நிலவரங்களும் தற்பொழுது தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சில இல்லங்கள் முறையான தரநிலைகளைப் பின்பற்றாமல் இயங்குவது குறித்தும், அவற்றைக் கண்காணிப்பதற்கான முறையான ஒழுங்குவிதிகள் இல்லாமை குறித்தும் கவலைகள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் அரசாங்கம் மேற்படி நடவடிக்கை எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.