
கண்டி, தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் வைத்தியர் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியரான 33 வயதான ஷம்யா தர்ஷனி என்ற பெண்ணே 17 ஆம் திகதி இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான அவரது காதலன் கன்னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் என்றும், அவர் தற்போது அப்பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோட்டல் அறையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 16 ஆம் திகதி இரவு சுமார் 9.50 மணியளவில் அந்த பெண்ணின் காதலன் வருகை தந்து சுமார் 40 நிமிடங்கள்
தங்கியிருந்த பின்னர் இரவு சுமார் 10.30 மணியளவில் மயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணை காரில் ஏற்றி அழைத்துச்சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன்பின்னர் சந்தேகநபரான காதலன் சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நிலையில்,
தெல்தெனியா பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச்சென்று ஆய்வு செய்தபோது, காரின் முன் இருக்கை மடிக்கப்படாமல், கருப்புத்துணியால் மூடப்பட்ட நிலையில் சடலம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
இருவரும் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு காதலிக்க தொடங்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் பெண்ணின் உடலைக்கொண்டு செல்ல பயன்படுத்திய கார், அம்பாறை பகுதியில் வசிக்கும் அவரது மற்றொரு தோழிக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், உயிரிழந்த பெண்ணிற்கு பிரேத பரிசோதனை நேற்று தெல்தெனிய வைத்தியசாலையில் சிறப்பு தடயவியல் வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது ஒரு முடிவு எட்டப்படாத நிலையில், அவரது உடல் பாகங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், சடலம் தற்போது அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்பட்ட மரணமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது.
உயிரிழந்த பெண்ணும் அவரின் காதலனும் கனடாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பெருந்தொகை பணத்தினை வங்கி மற்றும் பல தனிநபர்களிடமிருந்து கடனாக பெற்றிருந்த நிலையில்,
இதுவரை வெளிநாடு செல்லாத நிலையில், கடன் கொடுத்தவர்கள் மீண்டும் பணம் கேட்பதால் அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில், அவர் ஜூன் 3 ஆம் திகதி நுவரெலியாவில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்து தனது சகோதரரை தொலைபேசியில் அழைத்து, தான் 3 நாட்களாக சாப்பிடவில்லை என்றும்,
அம்பாறை வைத்தியசாலையில் உள்ள ஒரு மனநல வைத்தியரை அழைத்து, தான் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அங்குள்ள மருத்துவர், உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சைக்காக ஒரு மனநல வைத்தியரை அணுகுமாறு அவரிடம் கூறியதாகவும்,
16 ஆம் திகதி மாலை சுமார் 4 மணிக்கு மேல் அவரது கைபேசி அணைக்கப்பட்டிருந்ததாகவும் உயிரிழந்த பெண்ணின் சகோதரர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அவரது காதலன் தினெத் திசாநாயக்கவை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், நுவரெலியா பிரிவின் பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் சமரக்கோன் பண்டாவின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.




