சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து கோடிக்கணக்கான பணமோசடியில் சிக்கிய பெண்!!

138

ஆயுர்வேத வைத்தியர் போல் நடித்து பொது மக்களிடமிருந்து சுமார் 6 கோடி ரூபாய் மோசடி செய்த சட்டவிரோத வைத்தியர் ஒருவர் ஹொரணை பிரதேச சிறப்பு குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண், 53 வயதான திருமணமாகாதவர் என்றும், இவர் பூர்வீகமாக கிரிபாவா பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இவர் ஹொரணை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்து இந்த மோசடியை மேற்கொண்டுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொதுமக்களை ஏமாற்றுவதற்காக, அவர் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து, அவற்றில் மருத்துவ சின்னத்தை பொருத்தி, பல்வேறு பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார்.

பல்வேறு நோய்களுக்காக வெளிநாடுகளிலிருந்து சிறப்பு மருந்துகளை இறக்குமதி செய்வதாகக்கூறி நோயாளிகளின் நம்பிக்கையை பெற்று இந்த நாட்டில் பயன்படுத்த அங்கீகரிக்கப்படாத தரம் குறைந்த மருந்துகளையே அவர் வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட மருந்து கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துவிட்டதாகவும், அவற்றை விடுவிக்க பணம் தேவைப்படுவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கம்பஹா, மதுரவளை, மில்லனியா, பண்டாரகம, ஹொரணை மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளில் சந்தேகநபர் இந்த வழியில் பணத்தை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவரது மருத்துவ தகுதிகள் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் இலங்கை மருத்துவ சபை மற்றும் ஆயுர்வேத மருத்துவ சபையிடம் விசாரணை நடத்தியதில், அவர் எந்தவொரு மருத்துவ சபையிலும் பதிவு செய்யப்படாத ஒரு போலி மருத்துவர் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மோசடி செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்க்கு என்ன ஆனது என்பது இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும், சந்தேகநபரின் பெயரில் இரண்டு போலி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை பொலிஸார் கண்டறிந்து விரிவான விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.