
இலங்கையில் வரி செலுத்துவோர் உள்நாட்டு இறைவரித்திணைக்களம் (IRD)திணைக்களத்திற்கு 550 பில்லியன் ரூபாய்க்கும் மேல் வரிகளை செலுத்த வேண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சமீபத்திய வரித்திருத்தங்களை விளக்குவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு ஊடக சந்திப்பில், உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இதனை வெளிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு செலுத்தப்படாத இந்த வரிகளில் ஏறக்குறைய 100 பில்லியன் ரூபாயை மீட்பதற்கு சட்டரீதியான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த செலுத்தப்படாத வரிகளை மீட்பதற்கு திணைக்களம் பல பிற முறைகளையும் பயன்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளில், வங்கிக் கணக்குகளை முடக்குதல், சொத்துக்களைப் பறிமுதல் செய்தல் மற்றும் வரி செலுத்தத்தவறிய வரி செலுத்துவோருடன் கலந்துரையாடி உரிய நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்கு உதவுதல் ஆகியவை அடங்கும் என கூறப்படுகின்றது.
வரி செலுத்துவோர் விபரம்
உள்நாட்டு இறைவரித்திணைக்கள சட்டத்தின் கீழ் உரிய விதிகள் செய்யப்பட்டுள்ளதால், வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு திணைக்களத்திற்கு சட்டரீதியான அதிகாரம் உள்ளது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் சுமார் 1.3 மில்லியன் தனிநபர் வரி செலுத்துவோர் உள்ளதாகவும், மேலும் சுமார் 130,000 நிறுவனங்கள் வரி செலுத்துவோராகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




