வவுனியாவில் வீதியோரத்தில் குப்பை கொட்டிய இருவருக்கு தண்டப்பணம்!!

370

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில், வீதிக்கரைகளில் சட்டவிரோதமான முறையில் குப்பைகளை வீசிய இருவருக்கு எதிராக பிரதேச சபையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வீதியோரங்களில் தொடர்ச்சியாகக் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், பிரதேச சபையினரால் கண்காணிப்பு கமராக்கள் (CCTV) பொருத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், வீதியில் குப்பைகளை வீசிச் சென்ற இருவர் இந்த சிசிரிவி கேமராவில் சிக்கியுள்ளனர்.

கேமரா காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட இருவருக்கும் எதிராக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கமைய, குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 2000 ரூபாய் வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற பொது இடங்களை மாசுபடுத்தும் செயற்பாடுகள் தொடருமானால், இனிவரும் காலங்களில் தண்டப்பணத் தொகை மேலும் அதிகரிக்கப்படும் என பிரதேச சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், இவ்வாறான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும், பொதுச் சுகாதாரத்தைப் பேணுவதற்கும் தொடர்ச்சியான கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் சபை நிர்வாகம் எச்சரித்துள்ளது.