இலங்கையில் தொடரும் சோகம் – நான்கு மாணவர்கள் சடலங்களாக மீட்பு!!

173

புத்தளம், வனாத்தவில்லு பிரதேசத்தில் 4 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மங்களபுர வில்லுவில், பூக்கள் பறிப்பதற்காக படகு ஒன்றில் சென்ற பாடசாலை மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐந்து மாணவர்கள் நேற்றையதினம் படகு ஒன்றில் பூக்கள் பறிப்பதற்காக சென்று கொண்டிருந்த போது, படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் நீரில் மூழ்கிய மாணவர்களில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் ஏனைய மாணவர்கள் வனாத்தவில்லுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த மூவர் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் குறித்த பிரதேசத்தை சேர்ந்த பாடசாலையொன்றின் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பண்டாரநாயக்கபுர தேசியப் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி பயின்று வந்த சலிச கவிஷான், சேதன விஷ்மித, திலேன் மிஹிரங்க மற்றும் தேஷான் புத்திக ஆகிய மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் நடந்த தினமான நேற்று பாடசாலையில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான விஞ்ஞானப் பாட வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதன் போது, அந்த வகுப்பிற்குச் செல்லாமல் இந்த மாணவர்கள் தாமரை மலர் பறிப்பதற்காக சென்றிருந்தமை பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அண்மைக்காலமாக மாணவர்கள் உட்பட பொது மக்கள் நீரில் மூழ்கி பலியாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.