மாடியிலிருந்து விழுந்து குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!!

16

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியில், தேநீர் கடையொன்றின் மேல் தட்டுப் பகுதியிலிருந்து (மாடி) விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சோகச்சம்பவம் இன்று(01.07.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் தோப்பூர், பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சாதீக் றிஸ்வி (வயது 48)என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் வீடோடு இணைந்ததாகக் காணப்படும் தேநீர் கடையின் மேல் தட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, தூக்கக் கலக்கத்தில் தவறி விழுந்தாரா அல்லது இச் சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா? என்ற கோணத்தில் சேருநுவர பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டனர்.

அதன் பின்னர், சடலம் உடற்கூற்றாய்வு (பிரேத பரிசோதனை) பரிசோதனைக்காக கந்தளாய் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.