வவுனியாவில் இன்று மாலை இடி முழக்கம் மற்றும் கடும் காற்றுடன் மழை பெய்தமையினால் மரக் கிளை முறிந்து வீழ்ந்து மூவர் காயமடைந்துள்ளதாக வனியா வைத்தியசாலை விபத்துக்கள் பிரிவு தெரிவித்துள்ளது.
வவுனியா கண்டிவீதியில் அமைந்தீருந்த மரமொன்றின் கிளை வீழ்ந்தமையினாலேயே தாயும் இரு மகள்மாரும் காயமடைந்து உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இந் நிலையில் வவுனியா தாண்டிக்குளத்தில் அமைந்திருந்த தொலைத்தொடர்பு கோபுரமொன்று கடும் காற்றினால் முறிந்து வீழ்ந்துள்ளது. எனினும் குளத்தின் வான் பகுதிக்குள் இக் கோபுரம் வீழ்ந்துள்ளமையினால் எவருக்கும் சேதங்கள் ஏற்படவில்லை.
இதேவேளை தாண்டிக்குளத்தில் உள்ள பிள்ளையார் ஆலயத்தின் மடப்பள்ளிக்கு போடப்பட்டிருந்த சில கூரை கழன்றுள்ளதுடன் கொட்டகைகளின் கூரைகளும் கழன்றுள்ளது.
இதேவேளை தாண்டிக்குளத்தில் அமைந்திருந்த இராணுவத்தினரின் தேனீர்க்கடை மற்றும் அதனுடன் அமைக்கப்பட்டிருந்த மலசல கூடத்தின் மேல் போடப்பட்டிருந்த தகரங்களும் கழன்று வீதியில் கிடந்த போதிலும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இந்த நிலையில் இடி முழக்கத்துடன் சுமார் இரு மணித்தியாலங்களுக்கும் மேலாக பெய்த மழையினால் வீதியோரங்கள் பள்ளமான பகுதிகளில் நீர் வழிந்து ஓடியதை காணக்கூடியதாக இருந்தது.






