கொதிக்கும் தேநீரைக் குடித்த மாணவன் பரிதாபமாக பலி!!

13

கொல்கத்தாவின் நரேந்திரபூர் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமப் பள்ளியில் தங்கி, 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் திப்தான்ஷு மஹதோ ஆவான். இவன் தெர்மாஸ் பாத்திரத்தில் இருந்த கடுமையான கொதிக்கும் தேநீரைக் குடித்த பிறகு திடீரென உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் அங்கே அரங்கேறியுள்ளது.

இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ள மாணவனின் தந்தை, தனது மகனின் உடல்நிலை மோசமடைந்த பிறகும் பள்ளி நிர்வாகம் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் காலதாமதம் செய்ததாகப் பகீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

சம்பவத்தன்று காலை 11:15 மணிக்கு மகனின் உடல்நிலை குறித்துப் போன் வந்ததாகவும், மதியம் 1 மணிக்குத் தான் பள்ளிக்குச் சென்றபோது திப்தான்ஷு தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்ததாகவும் தந்தை கூறியுள்ளார். காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது ஒரு மடக்கு தண்ணீர் குடித்த உடனே அந்த மாணவன் மயங்கி விழுந்துள்ளான்.

பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

டீ கொதிக்கும்போது வாய் வெந்தும் ஏன் விழுங்கினாய் என்று தந்தை கேட்டதற்கு, டீயை வெளியில் துப்பினால் தரை அசிங்கமாகிவிடும் என்பதற்காகவே விழுங்கினேன் என்று திப்தான்ஷு இறப்பதற்கு முன் கூறிய உருக்கமான தகவல் நெஞ்சை பதறவைத்துள்ளது.

இந்த மரணம் குறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவர் ரவிகாந்த் சதுர்வேதி, வெறும் சூடான தேநீர் குடிப்பதால் மட்டுமே மரணமடைய முடியாது என்றும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மை தெரியவரும் என்றும் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பள்ளி நிர்வாகத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.