
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தின் போது சிறைச்சாலை பாதுகாவலர் டிலான் ஸ்ரீ அபேவர்தன உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாய் தமயந்தி பெரேரா தெரிவித்துள்ளார்.
“மகன் வெலிக்கடை சிறைச்சாலையில் கடமையை முடித்துவிட்டு வீடு திரும்பவிருந்த போது, என்னிடம் தொலைபேசியில் பேசினார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது, அதனால் இன்று என்னால் வீடு வர முடியாது என கூறினார். அவர் கூறியது போலவே, எனது மகனால் வீடு திரும்ப முடியவில்லை.
சிறைக்கைதிகள் அவரை மிகக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துவிட்டனர். என் மகனுடன் சிறைக்குள் சென்ற அதிகாரிகள் குழுவைச் சிறைக்கைதிகள் மிகவும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
என் மகனின் மரணம் குறித்து எங்களுக்குச் சந்தேகம் உள்ளது. ஆக்ரோஷமாகச் செயல்படும் கைதிகள் நிறைந்த இடத்திற்கு, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எனது மகனும் அவனது குழுவினரும் ஏன் அனுப்பப்பட்டார்கள்?
எனவே, இது குறித்து அரசாங்கம் உரிய மற்றும் நியாயமான விசாரணையை நடத்த வேண்டும்,” என்று டிலானின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
41 வயதான டிலான், குருநாகல், மதவ வத்தேகெதர பகுதியைச் சேர்ந்தவராகும். 8 வயது மகள் மற்றும் 10 மாத கைக்குழந்தையான மகன் என இரு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
அவரது மனைவி பண்டாரவெளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நூலகராகப் பணியாற்றி வருகின்றார். இந்த வன்முறை சம்பவதில் 7 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
சிறைக்கைதிகள் சிறைக்குள் காப்பரண்களை உடைத்துக் கொண்டு வெளியே வர முயற்சித்த வேளையில், அவர்களை கட்டுப்படுத்த முயற்சித்த பொலிஸ் குழுவொன்று கைதிகளிடம் சிக்கியிருந்தாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





