கைதிகளின் வன்முறையில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகள் : குடும்பத்தின் பரிதாப நிலை!!

141

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களில் பெரும்பான்மையானோர் மிகவும் இளம் வயதுடையவர்கள என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்த, புலத்சிங்கள – டெல்மல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சிறைச்சாலை பொலிஸ் அதிகாரி தர்ஷன தரங்க அதுகோரலவின் இழப்பு, அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மது மற்றும் புகைப்பிடித்தல் போன்ற எந்தவொரு தீய பழக்கவழக்கங்களும் இல்லாத மிகவும் கனிவான குணம் கொண்ட மகன், கைதிகளிடமும் மிகவும் அன்பாகவே நடந்துகொள்வார் என அவரது தாயார் கருணாவதி பெரேரா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

அப்பாவி மக்களின் கஷ்டங்கள் குறித்து எப்போதும் கவலைப்படும் தர்ஷனவுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் இளையவரான தர்ஷன தரங்க, 3 ஆண்டுகளுக்கு முன்பு அஷினி குமுதுமாலி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

உயிரிழக்கும் போது ஏழு மாதக் குழந்தை ஒன்றின் தந்தையாக அவர் இருந்துள்ளார். தர்ஷன பணி புரியும் போது ஏற்பட்ட இந்தத் துயரச் சம்பவம் குறித்து அறிந்ததும், தாயார் பலமுறை அவருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார்.

அதற்கு அவர் பதிலளிக்காத நிலையில், அவரது மனைவி மூலம் அவர் அவசர பணி நிமித்தமாக நீர்கொழும்பு சென்றிருப்பதாக அறிந்துக் கொண்டுள்ளார்.

மகன் உயிரிழந்த செய்தியை கேட்டுத் தந்தை கருணாசிரி உள்ளிட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நன்கு பயிற்சி பெற்ற விசேட படைப்பிரிவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளே இவ்வாறு நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் Prison Special Tactical Unit/Prison Emergency response strategic unit எனப்படும் சிறைச்சாலைகள் துரித தாக்குதல் மற்றும் தந்திரோபயப் படையணியைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளே கைதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

குறித்த படையணியானது பொலிஸ் விசேட அதிரடிப்படை போன்ற நன்கு பயிற்சி பெற்ற ஒரு சிறைச்சாலைப் படைப் பிரிவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் ஏற்படும் கைதிகளின் கடுமையான மோதல்கள், கலவரங்கள் மற்றும் அமைதியின்மையை துரித கதியில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டல்,

சிறைச்சாலைகளினுள் போதைப் பொருள் மற்றும் கைபேசி பாவனைகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாரியளவிலான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள்,

அவ்வாறானவர்களிடம் இருந்து எதிர்கொள்ள நேரிடக் கூடிய அச்சுறுத்தல்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளல் உள்ளிட்ட பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், சிறைச்சாலையினும் நிகழும் விடயங்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்களைச் சேகரித்தல், அச்சுறுத்தல் ஏற்படும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட சிறைச்சாலைகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பொறுப்புக்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றன.

இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து அனுப்பப்பட்ட குறித்த படையணியின் முதலாம் தர ஜெயிலர் சந்திரவங்ச,

சார்ஜண்ட் தர அதிகாரிகளான சஞ்சீவ, என்.தரங்க, புஷ்பகுமார, திலகசிறி, அபேவர்த்தன, ஏ.டி. தரங்க உள்ளிட்ட அதிகாரிகளே நீர்கொழும்பு கலவரத்தில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த அதிகாரிகளின் சடலங்களுக்கு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் இறுதி மரியாதை வழங்கப்பட்டு, இறுதிச் சடங்குகளுக்காக அவர்களின் சொந்த ஊர்களுக்கு சடலங்களை அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.