
கனடாவின் கியூபெக்கின் லேவிஸ் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் 51 வயதான சுஸ்மிதா பாஸ்கரன் என்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் பெண்ணின் முன்னாள் காதலரான 60 வயதுடைய மார்ட்டின் கேரியர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாயாவை பூர்வீகமாகக் கொண்ட சுஸ்மிதா ஒரு பொறியியலாளர் ஆவார். உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையில் பணியாற்றிய இவர் அமெரிக்காவில் வசித்த பிறகு சில ஆண்டுகளுக்கு முன்பு கியூபெக் நகரில் குடியேறினார்.
இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை முதல் அவரைக் காணவில்லை என்று உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
சுஸ்மிதா மற்றும் மார்ட்டின் கேரியர் ஆகியோருக்கு இடையே கடந்த 2010-ம் ஆண்டுகளில் இருந்து நீண்ட காலமாக ஒரு மோசமான உறவு இருந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் 2018-ஆம் ஆண்டு பிரிந்தாலும் சொத்து பிரச்சனை மற்றும் குடும்ப விவகாரங்கள் தொடர்பாக இருவருக்கும் இடையே நீதிமன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வந்துள்ளன.
2012-ஆம் ஆண்டு சுஸ்மிதா வீடு வாங்கிய போது கனேடிய குடியுரிமை இல்லாத காரணத்தால் மார்ட்டின் பெயரில் வீடு வாங்கப்பட்டது. ஆனால், 2019-ஆம் ஆண்டு அந்த வீட்டை விற்று அதன் முழு பணத்தையும் மார்ட்டின் தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார்.
இது தொடர்பாக 2024-இல் நீதிமன்றம் மார்ட்டினுக்கு சுஸ்மிதாவுக்கு சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் டாலர்களை திருப்பி செலுத்துமாறு உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மார்ட்டின் கேரியரை அரசு வழக்கறிஞர்கள் ஜாமீனில் விடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
தற்போது சடலத்தை சிதைத்ததாக மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் , அடுத்த கட்ட விசாரணையின் போது அவர் மீது கூடுதல் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வாய்ப்புள்ளதாக கனேடிய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.





