அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து : இளைஞர்கள் இருவர் பரிதாபமாக பலியான சோகம்!!

169

ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (19.07) அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் லொரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்களும் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பன்னிப்பிட்டிய மற்றும் கிரிவத்துடுவவை சேர்ந்த, 25 மற்றும் 17 வயதுடைய தில்ஷான் மதுசர செனவிரத்ன மற்றும் உதீஷா சித்மின என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஹொரணை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஹொரணையிலிருந்து அதிவேகமாக சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்களும், கனன்வில வளைவில் திரும்ப முயன்றபோது, ​​கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறப்பாதைக்குள் விலகியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தை தொடர்ந்து டிப்பர் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.