ஒரு இரவு தங்கினால் 52,000 ரூபாய் வழங்கும் வீட்டு உரிமையாளர்கள் : ஜப்பானில் இப்படியும் விநோதம்!!

148

ஜப்பானில் உள்ள சில வீட்டு உரிமையாளர்கள், ஒரு இரவு வீட்டில் தங்குபவர்களுக்கு ரூ.52,000 வழங்கி வருகின்றனர்.
ஜிகோ புக்கென் வீடுகள்

பிறப்பு விகிதங்கள் குறைந்து, முதியவர்கள் அதிகம் வசிக்கும் நாடாக ஜப்பான் உள்ளது. அங்கு தனிமையில் வசிக்கும் முதியவர்கள் உயிரிழந்தால் கூட உடனே வெளியே தெரியாத நிலை உள்ளது.

இவ்வாறாக தனிமை மரணம், உயிரை மாய்த்துக் கொள்ளுதல், கொலை, உயிரிழப்பை ஏற்படுத்திய தீ விபத்து போன்ற நிகழ்வுகள் நடக்கும் வீடுகள் ஜப்பானில் ஜிகோ புக்கென் (jiko bukken) என அழைக்கப்படுகிறது.

ஜப்பானில் வீடுகளை விற்க அல்லது வாடகைக்கு விடும் முன்னர் அந்த வீடுகள் ஜிகோ புக்கென் வீடா என்பதை குறிப்பிட வேண்டும்.

பலரும் அந்த வீட்டில் பேய் இருக்கலாம், அமானுஷியங்கள் நடக்கலாம் என நினைத்து இந்த ஜிகோ புக்கென் வீடுகளுக்கு வாடகைக்கு வரவோ, வாங்கவோ தவிர்த்து வருகின்றனர்.

இதன் காரணமாக, பல ஆண்டுகள் காலியாக இருக்கும் ஜிகோ புக்கென் வீடுகளை 20 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்க அல்லது வாடகைக்கு விட வீட்டு உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர்.

ஒரு இரவு தங்க ரூ.52,000

இந்நிலையில், ஜிகோ புக்கென் வீடுகளை வாங்க அல்லது வாடகைக்கு வருபவர்களுக்கு அந்த வீடுகளின் மீதான பயத்தை போக்க ஜப்பானின் ரியல் எஸ்டேட் ஸ்டார்ட்அப் நிறுவனமான கச்சிமோட் புதிய முயற்சியை கையிலெடுத்துள்ளது.

இந்த ஜிகோ புக்கென் வீடுகளில், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தங்கி இந்த வீடு பாதுகாப்பானது என சான்றளி கச்சிமோட் ஒரு இரவிற்கு 88,000 யென் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.52,000) வழங்குகிறது.

இப்படி தங்குபவர்கள், வீடியோ கேமராக்கள், ஒலிப்பதிவுக் கருவிகள், வெப்ப வரைவி உபகரணங்கள், மின்காந்த அலை கண்டறியும் கருவிகள் மற்றும் அறை வெப்பநிலை, ஈரப்பதம், வளிமண்டல அழுத்தம், இரைச்சல் அளவுகளைக் கண்காணிக்கும் உணரிகளையும் பயன்படுத்துகின்றனர்.

துயர சம்பவத்திற்குப் பிறகு வீடு முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்ப்பது, பேய்கள் போன்ற அமானுஷ்ய நடமாட்டம் அல்லது பிற விளக்க முடியாத நிகழ்வுகளுக்கான ஏதேனும் சான்றுகள் உள்ளதா என இவர்கள் சான்றளிக்கின்றனர்.

வீட்டு உரிமையாளர்கள் இந்த சான்றிதழை வீட்டிற்கு வாடகைக்கு வருபவர்கள் அல்லது வாங்க முன்வருபவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

ஒரு இடத்தை பேய் இல்லாத இடம் என்று அறிவித்த பிறகு, அங்கு பேய் நடமாட்டம் இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அதற்கான இழப்பீட்டையும் வழங்குவதாக உறுதியளிக்கின்றன.

சொத்து விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஒதுக்கப்பட்ட இந்த வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

200க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆய்வு

வீடியோ கேமராக்கள் எதிர்பாராதவிதமாக நின்றுவிடுவது, மைக்ரோஃபோன்கள் செயலிழப்பது உள்ளிட்ட அசாதாரண சம்பவங்களை அந்த உபகரணம் அவ்வப்போது பதிவு செய்துள்ளது என கச்சிமோட் நிறுவனர் கொடமா ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அமானுஷ்யம் என்று கூறப்படும் செயலை மீண்டும் நிகழ்த்திக் காட்ட இயலாது, அது ஒரு தனிப்பட்ட நிகழ்வாகக் கருதப்பட்டு நிராகரிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

இப்படி 200க்கும் மேற்பட்ட வீடுகளில் கச்சிமோட் ஆய்வு நடத்தியுள்ளது.

டோக்கியோவிற்கு அருகிலுள்ள சிபா மாகாணத்தில், 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வயதான பெண்மணி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட மற்றும் அவரது மகன் இறந்து சுமார் 10 நாட்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த ஒரு வீட்டில் 20 இரவுகள் கொடமா தங்கி ஆய்வு செய்துள்ளார்.

அப்போது, வன்பொருள் கோளாறு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படும் அவரது மடிக்கணினி, திடீரென அணைந்துவிட்டது, மீண்டும் இயங்கவும் இல்லை.

மற்றொரு வீட்டில் தன் மகளை இழந்த ஒரு தந்தை கொடாமாவிடம், “அவள் இந்த அறைக்குள் வந்தால், தயவுசெய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று கேட்டார்.

கொடாமா தங்கி ஆய்வு நடத்திய பின்னர் எந்த அசாதாரணங்களும் கண்டறியப்படாததால், அந்த தந்தை அவருக்கு நன்றி தெரிவித்தார்.