இலங்கையில் மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பச்சை மிளகாயின் விலை!!

100

சந்தையில் பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராமின் விலை 1,200 ரூபாவிற்கும் மேல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வறண்ட வானிலை மற்றும் பல்வேறு பூச்சித் தொற்றுக்கள் காரணமாக பச்சை மிளகாயின் சந்தை வரத்து குறைவடைந்துள்ளதால் அதன் விலை சடுதியாக அதிகரித்துள்ளது என்று தம்புத்தேகம பொருளாதார மைய வர்த்தக சங்கத்தின் தலைவர் எல்.எஸ்.கே.லியனகே தெரிவித்துள்ளார்.

அதிகரித்துள்ள விலையேற்றத்தின்படி, பச்சை மிளகாய் ஒன்றின் விலை 15 ரூபாயை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “தற்போதைய வறட்சியான காலநிலை, அநுராதபுரம், நொச்சியாகம, கஹடகஸ்திலிய போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மிளகாய் செய்கையை கடுமையாகப் பாதித்துள்ளது.

அத்துடன், கல்நேவ, மீகலேவ, எப்பாவல போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மிளகாய் செய்கையிலும் விளைச்சல் அதி குறைவாகவே உள்ளதாகவும்” அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அதிகமான விவசாயிகள் மிளகாய் செய்கையில் இருந்து படிப்படியாக விலகிச் செல்வதும் மிளகாயின் சந்தை வரத்து குறைவதற்கு காரணமாக இருப்பதாகவும், இதனாலும் மிளகாயின் விலை மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.