யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பண்பாட்டு ஊர்வலம்!!

86

தமிழ்மொழித் தினத்தையும் சுவாமி விபுலானந்தர் நினைவு தினத்தையும் முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பண்பாட்டு ஊர்வலம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஊர்வலமானது இன்றையதினம் (24.07.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரி முன்றலில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வுடன் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து, வைத்தீஸ்வராக் கல்லூரியிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் காங்கேசன்துறை வீதி, சத்திரச் சந்தி, வைத்தியசாலை வீதி, கார்கில்ஸ் சந்தி மற்றும் மணிக்கூட்டுக் கோபுரம் வழியாகச் சென்று காலை 10.30 மணியளவில் திருவள்ளுவர் பண்பாட்டு மண்டபத்தை வந்தடைந்தது.

இந்த ஊர்வலத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் கலை நிகழ்வுகளுடன் புரவி நடனம், பொய்க்கால் குதிரை, கும்மி, மயில் நடனம், கோலாட்டம், காவடி நடனம், செம்பு நடனம், சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், உடுக்கு, இன்னியம், தவில் – நாதஸ்வர இசை உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

மேலும், தமிழ் மொழி மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் அலங்கார கலாசார ஊர்திப் பவனியும் ஊர்வலத்திற்கு தனிச்சிறப்பைச் சேர்த்தது.