
தென் மாகாணத்தில் நபர் ஒருவருக்கு சொந்தமான சுமார் 1,500 லட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் நேற்று தடை செய்யப்பட்டுள்ளன.
தென் மாகாணத்தின் முன்னணி பாதாள உலகக் குழுத் தலைவனும் போதைப்பொருள் வர்த்தகருமான ரத்கம விதுர என்பவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சொத்துக்களே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சொத்துக்கள் ரத்கம விதுரவின் சித்தியின் பெயரில் விலைக்கு வாங்கப்பட்டவை என விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பல்வேறு சட்டவிரோதச் செயல்கள் மூலம் ஈட்டிய பணத்திலிருந்தே ரத்கம விதுர இந்தச் சொத்துக்களைச் சேர்த்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதற்கமைய, தடை செய்யப்பட்டுள்ள சொத்துக்களுக்குள் 4 நிலங்கள், 3 மாடிகளைக் கொண்ட 2 வீடுகள் மற்றும் ஒரு மாடி வீடு ஒன்று அடங்குவதாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரத்கம விதுரவுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான மேலும் பல சொத்துக்கள் எதிர்காலத்தில் தடை செய்யப்படவுள்ளது.
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ரத்கம விதுரவிற்கு எதிராக 18 கொலைகள் உட்பட 24 குற்றச்சாற்றுகள் உள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து இந்தச் சொத்துக்கள் எதிர்காலத்தில் அரசமயமாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





