நல்லத்தண்ணி மோகினி நீர்வீழ்ச்சி விபத்து – பாடசாலை மாணவி உயிரிழப்பு!!

99

கடந்த 22 ஆம் திகதி நல்லத்தண்ணி மோகினி நீர்வீழ்ச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 13 வயது பாடசாலை மாணவி சிகிச்சை பலனின்றி இன்று (30) உயிரிழந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் கீழ் நல்லத்தண்ணி முர்ரே தோட்டத்தினை சேர்ந்த மஸ்கெலியா புனித ஜோசப் கல்லூரியில் 8ஆம் வகுப்பில் கல்வி பயின்ற மாணவி செல்வம் திஷ்னா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாணவியின் சடலம் மீதான மரண விசாரணையின் பின்னர், உடற்கூற்றுப் பரிசோதனை செய்யப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

நல்லத்தண்ணியிலிருந்து மாஸ்கெலியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி கடந்த 22ஆம் திகதி மோகினி எல்ல பகுதியில் பிரதான வீதியில் இருந்து விலகிச்சென்று விபத்துக்குள்ளாகியிருந்தது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும், பின் இருக்கையில் பயணித்த அவரது உறவினரும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பாடசாலை மாணவிகளும், ஒரு பாடசாலை மாணவனும் படுகாயமடைந்து, கண்டி போதனா வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் டிக்கோயா ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவன் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.