வவுனியா கனகராயன்குளத்தில் பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் ஆவணக் காப்பகம் திறப்பு!!

33

வடக்கு மாகாண மக்களின் நீண்டகாலக் காத்திருப்புக்குத் தீர்வாக, பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் வடக்கு மாகாண ஆவணக் காப்பகம் இன்று (30.07.2026) வவுனியா, கனகராயன்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள மன்னகுளம் கிராம சேவையாளர் பிரிவில் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

பொது நிர்வாகம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் A.H. சந்தன அபயரத்னவினால் இந்த புதிய ஆவணக் காப்பகம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் ரூவன் செனரத், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் உயர் அலுவலர்கள் உட்படப் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதுவரை காலமும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது முக்கிய ஆவணங்களான பிறப்புச் சான்றிதழ்கள், இறப்புச் சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் மூலப் பிரதிகளைப் பெறுவதற்கும், திருத்தங்களை மேற்கொள்வதற்கும் கொழும்பு வரை நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

தற்போது வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த மாகாண ஆவணக் காப்பகத்தின் மூலம், வடக்கு மாகாண மக்கள் அனைவரும் கொழும்பு செல்ல வேண்டிய அவசியமின்றி, மிகக் குறைந்த நேரத்திலும் இலகுவாகவும் தமக்கான சான்றிதழ்கள் மற்றும் ஆவணச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.