இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் அணித்தலைவர் மார்வன் அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த போல் பார்பிராஸ் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அந்த பதவியில் இருந்து அவர் விலகினார்.
இதனையடுத்து இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளராக மார்வன் அத்தபத்து நியமிக்கப்பட்டார். இதற்கிடையில் தலைமை பயிற்சியாளராக யாரை நியமிப்பது என்பது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை ஆலோசனை நடத்தி வந்தது.
பயிற்சியாளர் பட்டியலில் அத்தபத்து, ஜான் லீவிஸ் (இங்கிலாந்து) ஆகியோரின் பெயர் இருந்தது. இதில் அத்தபத்துவை புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் சபை நேற்று அறிவித்தது.
கடைசியாக 1999ம் ஆண்டில் இலங்கையை சேர்ந்த ரோய் டயஸ் பயிற்சியாளராக இருந்தார். ஆனால் 15 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூரை சேர்ந்த ஒருவர் இலங்கை அணியின் முழு நேர பயிற்சியாளராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.