
வவுனியா – ஏ9 வீதியில் வீதி விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று (31.07.2026) இடம்பெற்ற மற்றொரு சோகச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழத்துள்ளார். இன்று (31.07.2026) மதியம் ஏ9 வீதியின் புளியங்குளம் பகுதியில் இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சொகுசுப் பேருந்து மோட்டார் சைக்கிளுடன் மோதிக்கொண்டதில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்தில்,மோட்டார் சைக்கிலின் சாரதியான மதவுவைத்த குளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவராவார்.

ஏ9 வீதியின் வவுனியா முதல் கனகராயன்குளம் வரையிலான வீதிப் பகுதி அண்மைக்காலமாக கடும் அபாயகரமான மண்டலமாக மாறிவருகிறது.
கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் இவ்வீதிப் பகுதியில் இடம்பெற்ற தொடர் விபத்துகளில் 5 பேர் வரை தங்கள் இன்னுயிர்களை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், பேருந்தின் ஓட்டுநரைக் கைது செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிவேகப் பயணம் மற்றும் வீதிப் போக்குவரத்து விதிகளைச் சரியாகப் பின்பற்றாமையே இத்தகைய விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாக அமைகின்றது எனச் சுட்டிக்காட்டும் சுற்றாடல்வாசிகளும் சமூக ஆர்வலர்களும், இவ்வீதியில் போக்குவரத்துப் பொலிஸாரின் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.






