சீரற்ற வானிலையால் நுவரெலியாவில் பெரும் பாதிப்பு : 5 பேர் பலி – ஒருவர் மாயம்!!

6

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (04) நண்பகல் வரையான காலப்பகுதியில் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும் மூவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கினிகத்தேனை, மொரஹேன கிராமப் பகுதியில் ஏற்பட்ட திடீர் மண்சரிவில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அதேபோன்று, அம்பகமுவ பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் வெள்ள நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களிலிருந்து 523 குடும்பங்களைச் சேர்ந்த 2,195 பேர் உடனடி பாதுகாப்பு நடவடிக்கையாக 20 இடைத்தங்கல் நலன்புரி மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய நிவாரண உதவிகளை வழங்கும் பணிகள் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக மாவட்டத்தில் 2 வீடுகள் முழுமையாகவும், 90 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அத்துடன், அவிசாவளை – ஹட்டன் – நுவரெலியா வீதியின் 66 ஆம் கிலோமீற்றர் பகுதி,

லக்ஷபான – பொல்பிட்டிய வீதி, டன்சினன் – பூண்டுலோயா வீதி மற்றும் டிக்கோயா பகுதியில் உள்ள வீதி ஆகிய பிரதான வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது இவ்வீதிகளைச் சீரமைத்து, போக்குவரத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதேவேளை, கொத்மலை – பனம்ஹம்மன வீதியில் மண்சரிவு அபாயம் தீவிரமடைந்துள்ளதால், பாதுகாப்பு நிமித்தம் அவ்வீதி போக்குவரத்திற்காக முற்றாக மூடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலகம் மேலும் அறிவித்துள்ளது.