
இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2026 ஜூலை மாதத்தில் 25,622 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றுள்ளதுடன், இது இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது.
இஸ்ரேல், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் அரசாங்கம் எட்டியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காரணமாக அந்நாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் இலங்கையர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, ஜூலை மாதத்தில் இஸ்ரேலுக்கு 2,521 பேரும், தென் கொரியாவுக்கு 1,618 பேரும், ஜப்பானுக்கு 79 பேரும் சென்றுள்ளனர். அத்துடன், ஜப்பானில் உற்பத்தி, கட்டுமானம், செவிலியர் பராமரிப்பு மற்றும் விவசாயத் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்ற 14 இளைஞர்,
யுவதிகளுக்கு நேற்று (03) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் வைத்து விமான பயணச்சீட்டுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை, இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களால் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு வருவாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





