
அபுதாபியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் நேரடி தலையீட்டின் காரணமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கம்பளை – அத்கால பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சாமிக இஷான் லியனகே என்ற இளைஞனின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்றையதினம் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளன.
உறவினர்கள் நடவடிக்கை
கடந்த 2 வருடங்கள் 10 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அபுதாபிக்குச் சென்ற இளைஞன் தாக்குதல் ஒன்றினால் கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, உயிரிழந்த இளைஞரின் மாமா, அந்த இளைஞரை வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர் நிலையத்திடம் தகவல்களைக் கோரியபோதிலும், ஒப்பந்தக் காலம் முடிவடைந்துவிட்டதாக கூறி அந்த நிறுவனம் பொறுப்பிலிருந்து நழுவ முயன்றுள்ளது.

இதனையடுத்து, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் வெளிவிவகார அமைச்சில் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரிலிருந்து உடனடியாக நாடு திரும்பிய தாயாரும் உறவினர்களும் தேவையான சட்ட ஆவணங்களைத் தயாரித்து அபுதாபி நிறுவன அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். எனினும் அது பலனளிக்கவில்லை.
பிரதமர் தலையீடு
இதற்கிடையில் நிர்க்கதிக்குள்ளான குடும்ப உறவினர்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வாட்ஸ்அப் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளனர்.
இதன் காரணமாக பிரதமரின் பணிப்புரையின் பேரில் பிரதமர் செயலகம் தலையீடு செய்து, சடலத்தை நாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

பிரதமரின் மற்றும் அமைச்சின் முயற்சியால் கடந்த ஜுலை மாதம் 29 ஆம் திகதி நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சடலம், கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸார் மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலை ஊடாகப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.
அங்கு இடம்பெற்ற மரணப் பரிசோதனை மற்றும் நீர்கொழும்பு நீதவான் உத்தரவிற்கமைய, தலையில் ஏற்பட்ட பலத்த தாக்கம் காரணமாக இரத்தம் உறைந்தமையும், உடலின் பல இடங்களில் ஏற்பட்ட காயங்களுமே இந்த மரணத்திற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவர் அபுதாபி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.





