
சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் இருந்தவாறு இளைஞன் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக புகைப்படம் ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வந்தது.
கொஹூவல பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இவ்வாறு பணி முடிந்து, நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளில் உறங்கிய நிலையில், தூக்கத்திலேயே அவருடைய உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்து இந்த பதிவு அதிகமாக பகிரப்பட்டிருந்தது.
இந்தநிலையில், குறித்த புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்களுக்கு பொலிஸார் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். குறித்த எச்சரிக்கை பதிவில்,

சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான செய்திகள், போலியான தகவல்கள் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான தகவல்களை (Fake News) பரப்புவது இலங்கையில் தண்டனைக்குரிய குற்றமாகும்.
இவ்வாறான தகவல்கள் சமூகத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்பு மிகவும் அதிகமாகும். எனவே, எந்தவொரு தகவலையும் பகிர்வதற்கு செய்வதற்கு முன்னர் சரிபார்க்கவும்.
பகிரப்படும் தகவலின் மூலம் உண்மையானதா, நம்பகமான உத்தியோகபூர்வ செய்தி மூலங்களால் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக என்பதை சரிபார்க்கவும்.
உண்மையான தகவல் என உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே இவ்வாறான தகவல்களைப் பகிரவும். வேண்டுமென்றே பொய்யான தகவல்களைப் பரப்பி,
பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக, தண்டனைச் சட்டக்கோவை மற்றும் கணினிக் குற்றச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உண்மைத்தன்மையைச் சரிபார்க்காமல் எதையும் பகிராதீர்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





