
கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் வைத்து கேரள பெண்ணை ஸ்காட்லாந்து எம்.பி திருமணம் செய்துள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பம்பக்குடாவைச் சேர்ந்த நிதின் சந்த்(nitin chand) என்பவர், 2008 ஆம் ஆண்டில் மாணவர் விசா மூலம் பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்தார்.
அங்கு, அரசாங்கத்தின் குடிவரவு விதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அவரது விசா ரத்து செய்யப்பட்டது.
விசா தொடர்பான பிரச்சினைகளுக்காக 2016 ஆம் ஆண்டில், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மார்ட்டின் டே(martyn day) என்பவரை நிதின் சந்தித்து இது குறித்து பேசினார். அப்போதே நிதின் மீது மார்ட்டின் டேவிற்கு காதல் மலர்ந்துள்ளது.
தான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர், தனக்கு 12 வயதில் ஒரு குழந்தை உள்ளது என நிதின் சந்த் தெரிவித்த நிலையிலும் மார்ட்டின் டே இதில் உறுதியாகி இருந்துள்ளார்.
இதனையடுத்து, மார்ட்டின் டேயின் பெற்றோர்கள் இந்த காதலுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில் அவர்கள் பிரித்தானியாவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
குருவாயூரப்பனின் தீவிர பக்தையான நிதின் சந்த், தனது திருமணம் குருவாயூர் கோவிலில் நடைபெற வேண்டும் என்று நீண்ட காலமாகப் பிரார்த்தனை செய்து வந்துள்ளார்.
விசா நடைமுறை காரணமாக அப்போது செல்ல முடியவில்லை. அதன் பிறகு 3 முறை இந்த தம்பதிகள் குருவாயூருக்கு வந்தும் திருமணம் செய்யும் சூழல் அமையவில்லை.
இந்நிலையில், தற்போது கேரளாவிற்கு இந்த தம்பதி வந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 16 ஆம் திகதி கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் வைத்து 55 வயதான மார்ட்டின் டே, 49 வயதான நிதின் சந்திற்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்தில், நிதின் சந்திராவின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த 22 வயது மகன் வேதிக் சங்கரும் உடனிருந்தார்.
மேலாண்மை ஆலோசகராக பணியாற்றும் நிதின், தன் கணவருடன் இணைந்து ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில், ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி (SNP) சார்பில் ஃபால்கிர்க் கிழக்கு மற்றும் லின்லித்கோ தொகுதியில் போட்டியிட்ட மார்ட்டின் டே, 14,465 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
மார்ட்டின் டே மலையாள மொழியை கற்கவும், கேரள பாரம்பரியத்தை புரிந்து கொள்ளவும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.





