
யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞருக்கு 24 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 2021ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தால், யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் கடந்த 4 வருடங்களாக இடம்பெற்று வந்த நிலையில், நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சம்பவம் மீதான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞருக்கு 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.





