
ஜெயலலிதாவுக்கு அடுத்த படியாக காங்கிரஸ் கட்சியின் சோனியா மற்றும் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே தமது பணி என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் அளித்த தண்டனையை அபாரமானது என சுப்பிரமணியன் சுவாமி வர்ணித்துள்ளார். அடுத்து சோனியா, ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே தனது வேலை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா ஒரு ஊழல்வாதி என்பது நன்றாகவே தெரியும் இதன் அடிப்படையிலேயே 1996ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கை தாக்கல் செய்ததாக சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டார்.
இந்தநிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் நேர்மையுடன் நிமிர்ந்து நின்று தைரியமாக சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார். இது ஒரு இந்தியனாக தமக்கு பெருமையாக இருக்கிறது என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
மேலும் 100 கோடி ரூபா அபராதமென்பது ஜெயலலிதாவுக்கு பெரிய விடயம் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்ட் செய்தித்தாள் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்திதான் தமது அடுத்த இலக்கு. எனவே ராகுல், சோனியாவை கிறிஸ்மஸ் தினத்திற்குள் சிறைக்கு அனுப்ப முயற்சிக்கப் போவதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.





