மகளின் கல்விக்காக வெறும் காலுடன் மாரத்தான் ஓடிய 47 வயது தாய்!!

18

47 year old mother runs marathon with barefoot for daughter education: மகளின் கல்விக்காக 47 வயது தாய் வெறும் காலுடன் மாரத்தான் ஓடி முதலிடம் பிடித்து பரிசு வென்றுள்ளார். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் ஒரு கல்வி நிறுவனம் சார்பில் மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

சத்ரபதி சிவாஜி மகாராஜ் சௌக்கில் தொடங்கி பாக்யநகர் சௌக்கில் நிறைவடையும் இந்த மாரத்தான் 3கிமீ தூரம் கொண்டது. இப்போட்டியில் ஏராளமான உள்ளூர் இளைஞர்களும் இளம்பெண்களும் கலந்துகொண்டனர்.

பலரும் டிராக்சூட்கள் மற்றும் தொழில்முறை ஓட்டக் காலணிகளை அணிந்து போட்டியில் கலந்து கொண்ட போதிலும், 47 வயதான பெண் காலணி அணியாமல் புடவை கட்டிக்கொண்டு ஓடி வெற்றி பெற்றுள்ளார்.

அம்பாஜோகாயை சேர்ந்த 47 வயதான ரமாபாய் ரன்வீர், தனது கணவர் இறந்த பின்னர் தனது ஒற்றை வருமானத்தில் தனது இரு மகள்களையும் வளர்த்து வருகிறார்.

ரமாபாய் ரன்வீர் பல்வேறு வீடுகளுக்கு சென்று வீட்டு வேலை செய்யும் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். அவருடைய மகள்களில் ஒருவர் நாந்தேடில் பிசிஎஸ் படித்து வருகிறார், மற்றொருவர் அம்பாஜோகாயில் உள்ள ஞான்தீப் காவல் அகாதமியில் காவலர் பணிக்குத் தயாராகி வருகிறார்.

இவர்களின் கல்வி செலவை சமாளிக்க போராடி வரும் ரமாபாய் ரன்வீர், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ரூ.3,000 பரிசு கிடைக்கும் அதை கல்வி செலவிற்கு பயன்படுத்தலாம் என முடிவெடுத்து இந்த போட்டியில் கலந்து கொண்டார்.

மற்றவர்கள் டிராக்சூட்கள், தொழில்முறை ஓட்டக் காலணிகளை அணிந்து ஓடும் போது, ரமாபாய் சேலை அணிந்து கொண்டும் சாதராண செருப்புடன் ஓட தொடங்கினார்.

ஆனால், செருப்புகள் ஓட முடியாமல் வலுக்கியபடி இருந்த நிலையில், அதனை கழற்றி கையில் பிடித்து கொண்டு வெறும் காலுடன் 3 கி.மீ தூரம் ஓடி முதல் நபராக போட்டியை நிறைவு செய்தார். ஆனால், அவருக்கு வழக்கமான ரூ.3,000 பரிசை விட கூடுதலாக ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.