
கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில், வெளிநாட்டிலிருந்த வந்த குற்றக் கும்பலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தெஹிவளை ஓபன் பகுதியில் இன்று அதிகாலை 1.45 மணியில் இடம்பெற்றுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளார்.
திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவரின் உறவினரான பூத களுவா என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார். நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டுக்குள் நுழைந்து உறக்கத்தில் இருந்த களுவா மீது கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளனர்.
படுகாயம் அடைந்த களுவா, களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொலை செய்யப்பட்ட நபர், திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவருடன் பல வருடங்கள் டுபாயில் தங்கியிருந்துள்ளார்.
பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் சில வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்தக் கொலையைத் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான படோவிட்ட அசங்கவின் தரப்பினர் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





