
வரும் 14 ஆம் திகதி ஆவணி விநாயகர் சதுர்த்தி வரவுள்ள நிலையில் இந்தியாவில் விநாயகர் சிலைகள் பிரமாண்டமாக தாயாரிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இன்னிலையில் மும்பையின் பணக்கார விநாயகர் மண்டலமாக கிங்கிஸ் சர்க்கிள் ஜி.எஸ்.பி சேவா மண்டல் உள்ளது.
இந்த ஆண்டு தனது 72வது விநாயகர் சதுர்த்தியை செப்டம்பர் 14, 2026 முதல் செப்டம்பர் 18, 2026 வரை என மொத்தம் 5 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாட தயாராகி வருகிறது. இந்த நிலையில் தான், மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலையை தயார் செய்து அசத்தியுள்ளது.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ள விநாயகர் சிலைக்கு பொதுமக்கள் காணிக்கையாக அளித்த சுமார் 66 கிலோ தங்கம் மற்றும் 335 கிலோ வெள்ளி ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட உள்ளது.
இத்தகைய மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலைக்கு அந்த மண்டல் சுமார் ரூ.703 கோடியே 27 லட்சத்தில் காப்பீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.474 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களுக்கு சேர்த்து இந்த காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கும் சேர்த்து காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.





