உலகப் பிரபலத்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை!!

32

போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் கருணை காட்ட வேண்டும் என கோரியுள்ளார். செயற்கை போதைப்பொருட்களைத் தயாரித்தல், ஊக்குவித்தல் மற்றும் வர்த்தகம் செய்தல், அத்துடன் உரிமம் இல்லாமல் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருத்தல்,

மற்றும் எடுத்துச் செல்லுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் சாரா கலிஃபா மற்றும் மேலும் 11 பேருக்கு தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ‘மிஷன் இம்பாசிபிள்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் எகிப்தில் நன்கு அறியப்பட்ட 39 வயதான கலீஃபா, கெய்ரோ நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.

ஆனால், தாம் தவறேதும் செய்யவில்லை என்றே கலீஃபா தொடர்ச்சியாக கூறி வருகிறார். தண்டனை அறிவிப்பின்போது, ​​அவர் கருணை காட்ட வேண்டும் என நீதிமன்றத்தில் அழுதுள்ளார்.

மரண தண்டனை வழக்குகளில் எகிப்திய சட்டப்படி அவசியமான ஒரு நடைமுறையாக, எகிப்தின் தலைமை முஃப்தியிடம் அவரது மதரீதியான கருத்தையும் நீதிமன்றம் கலந்தாலோசித்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்தக் கட்டத்தில் தீர்ப்பு இறுதியானதல்ல, மேலும் இது மேல்முறையீட்டிற்கு உட்பட்டது. கலீஃபாவின் குற்றச் செயல்கள் எனக் கூறப்படும் செயல்கள் தொடர்பான 20 சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் அந்த விசாரணை நடைபெற்றது.

அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவிக்கையில், விசாரணை அதிகாரிகள் 750 கிலோகிராமுக்கும் அதிகமான செயற்கை போதைப்பொருட்களையும், அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களையும் கைப்பற்றினர். இந்த வழக்கில் கூடுதலாக ஒன்பது பிரதிவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன், மேலும் ஏழு பேர் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கலீஃபா கைது செய்யப்பட்டார். பயங்கரவாதம், திட்டமிட்ட கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு எகிப்தில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மட்டும் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக எகிப்திய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான ஆணையம் கூறியுள்ளது. மட்டுமின்றி 23 கைதிகளைத் தூக்கிலிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.