
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதால் அதிர்ச்சியடைந்தும், உடனடியாக அவரை விடுவிக்கக் கோரியும் தமிழகத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த வாரம் சனிக்கிழமை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிற்கு எதிரான இத்தீர்ப்பை எதிர்த்து கடந்த ஒரு வாரமாக அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுகவினருடன் இணைந்து மற்ற துறையினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஜெயலலிதா கைதால் அதிர்ச்சியடைந்த அதிமுக தொண்டர்கள் சிலர் மாரடைப்பால் உயிரிழந்தார்கள்.
மேலும், சிலர் ஜெயலலிதாவை உடனடியாக விடுதலை செய்யக் கோரி தற்கொலை செய்து கொண்டனர். இதில் பள்ளி மாணவிகளும் அடக்கம் என்பது தான் கூடுதல் வேதனை தரும் விடயம்.
இந்நிலையில், இவ்வாறு தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளதாக அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





