ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கர்நாடக நீதிமன்றம் உத்தரவு!!

602

Jeya

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவிக்காததால், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மற்றும் தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் இன்று செவ்வாய்க்கிழமை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. நீதிபதி சந்திரசேகரா முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, வழக்கறிஞர் குமார் ஆகியோர் ஆஜரானார்கள். தன்னுடைய வாதங்களை எழுத்து பூர்வமாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார் ராம்ஜெத்மலானி.

ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில்கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் என்கிற அடிப்படையில் ஜாமீன் வழங்கலாம். முதலமைச்சர் பதவி வகித்தவர் தலைமறைவாக வாய்ப்பில்லை. 4 வருடமே தண்டனை என்பதால் அரசு தரப்பு வாதத்தை கேட்காமலேயே ஜாமீன் வழங்கலாம் என்றார்.

ஜாமீனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் வாதிட்டார். மதிய உணவு இடைவேளைக்காக 2.30 மணி வரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் கூடியது. அப்போது, ஜெயலலிதாவை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கலாம் என்று பவானி சிங் கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.