வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல்!!

632

vasanthan

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் கிருஸ்ணகோபால் வசந்தரூபனுக்கு கைத்தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, கற்பகபுரம் கிராம அலுவலர் தொடர்பான செய்தியினை வெளியிட்டதாக கூறி வவுனியா மாவட்ட அரசியல்வாதி ஒருவரால் ஊடகவியலாளர் கிருஸ்ணகோபால் வசந்தரூபன் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அரசியல்வாதியின் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவரின் கைத் தொலைபேசியில் இருந்தே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த ஊடகவியலாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது,

இன்று (06) திங்கள் கிழமை மதியம் 1.03 மணியளவில் அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் ஒருவருடைய தொலைபேசியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதற்கு நான் பதில் அளித்த போது அரசியல்வாதி ஒருவருடைய பெயரைக் கூறி “அவர் உங்களுடன் கதைக்கப் போறாராம்” எனக் கூறப்பட்டது. நானும் “ஆம், கொடுங்கள்” என்றேன்.

அப்போது “கற்பகபுரம் தொடர்பான செய்தியை ஏன் அவ்வாறு வெளியிட்டாய்?, கிராம அலுவலருடன் கதைத்தீர்களா?, ‘இப்படியே வெளியிட்டால் “ஆளே இல்லாமல்” போகவேண்டி வரும், நாங்க மறுப்புத் தந்தால் போடுவீங்களா?” என கூறி அச்சுறுத்தல் விடப்பட்டது எனத் தெரிவித்தார்.

இதேவேளை, கற்பகபுரம் கிராம அலுவலரை தாக்கியதாக இருவர் கைது செய்யப்பட்டமையும், கிராம அலுவலர் பொய் முறைப்பாடு செய்துள்ளதாக கூறி அவருக்கு எதிராக ஆர்பாட்டம் நடைபெற்றமையும் அவர் இராணுவத்தைக் கொண்டு மிரட்டியதாக பழைய கற்பகபுரம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர், செயலாளர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

-நன்றி அதிரடி இணையம்-