வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்துகின்ற வன்னியின் வாதச்சமர் 2014 எனும் மாபெரும் விவாதப் போட்டியின் வவுனியா மாவட்ட போட்டிகள் கடந்த 04.10.2014 ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 04.05.2014 மற்றும் 05.10.2014 ஆகிய தினங்கிளில் இடம் பெற்ற தகுதிகாண் சுற்றின் அடிப்படையில், தர வரிசையில் முதல் 8 நிலைகளைப் பெற்ற பாடசாலை அணிகள், நேற்று (08.10.2014) இடம் பெற்ற காலிறுதிப் போட்டியில் மோதிக்கொண்டன.
08.10.2014 புதன்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய போட்டியில், காலிறுதியில் கனகராயன்குளம் மகா வித்தியாலயம் எதிர் புதுக்குளம் மகா வித்தியாலயம், விபுலானந்த கல்லூரி எதிர் கந்தபுரம் வாணி வித்தியாலயம், பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலயம் எதிர் இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் எதிர் கோமரசங்குளம் மகா வித்தியாலயம் ஆகிய அணிகள் சமர் செய்தன.
இவற்றில் வெற்றி வாய்ப்பை பெற்று, புதுக்குளம் மகா வித்தியாலயம், விபுலானந்த கல்லூரி, இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம், கோமரசங்குளம் மகா வித்தியாலயம் ஆகியன அரையிறுதிக்குள் நுழைந்தன.
அரையிறுதிச் சுற்றில் இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம் எதிர் விபுலானந்த கல்லூரி, புதுக்குளம் மகா வித்தியாலயம் எதிர் கோமரசங்குளம் மகா வித்தியாலயம் ஆகியன சமர் செய்தன.
இவற்றில் வெற்றி வாய்பை பெற்று இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம் மற்றும் புதுக்குளம் மகா வித்தியாலயம் ஆகியன இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.
அரையிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த விபுலானந்த கல்லூரி மற்றும் கோமரசங்குளம் மகா வித்தியாலயம் ஆகியவற்றிகிடையே, வவுனியா மாவட்டத்தின் மூன்றாம் நிலை வெற்றியாளரை தீர்மானிக்கின்ற போட்டி இடம் பெற்றது.
தமிழ் சினிமாவின் தற்காலப் போக்கு இளைஞர்களின் வாழ்வை வழிப்படுத்துகிறது இல்லை என்ற தலைப்பில் இடம் பெற்ற சுவரஸ்யமிக்க இவ் விவாதத்தில், கோமரசங்குளம் மகாவித்தியாலயம் வெற்றி வாய்ப்பை பெற்று, வன்னியின் வாதச்சமர் 2014 இன் வவுனியா மாவட்ட மூன்றாம் நிலை வெற்றியாளராக தெரிவாகியது.
இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம் மற்றும் புதுக்குளம் மகா வித்தியாலயம் ஆகியவற்றிக்கிடையிலான, வவுனியா மாவட்ட முதல் மற்றும் இரண்டாம் நிலை வெற்றியாளரை தீர்மானிக்கின்ற மாபெரும் இறுதிச் சுற்று எதிர்வரும் 11.10.2014 சனிக்கிழமை இடம் பெறவுள்ளது.