வவுனியா, இறம்பைக்குளத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தின் தேர் இன்று அதிகாலை இனந்தெரியாதவர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் பின் பகுதியில் பாதுகாப்பான முறையில் கட்டிடமொன்றினுள் நிறுத்தி வைக்கப்பட்ட தேரே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை பிரார்த்தனைக்கு வந்தவர்கள், தேர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் கதவு திறந்திருப்பதை கண்டதுடன் அதனுள் இருந்து புகை வருவதையும் அவதானித்துள்ளனர்.
பின்னர் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். எனினும் தேரின் அதிகளவான பகுதி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் ஆலயத்தின் நிர்வாகம் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.