சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிணை மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், வரும் 17ம் திகதி பிணை மனு மீது விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பிணை கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிணை கேட்டு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் சிக்ரி, லோகூர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் பாலின் நரிமன் ஆஜராகி, மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து, பிணை மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வரும் 17ம் திகதி மனு மீதான விசாரணை நடைபெறும் என்று அறிவித்தனர்.
பெங்களூரு சிறையில் இன்றுடன் 17வது நாளாக இருக்கும் ஜெயலலிதாவுக்கு, அக்டோபர் 17ம் திகதி பிணை கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.