கடந்த இரண்டு வருடங்களாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் காத்திருந்த இலங்கை அகதிகளில் கடைசி தொகுதியினர் பிரேசிலுக்கு செல்கின்றனர்.
பிரேசிலில் புதிய வாழ்க்கை ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை அங்கு செல்லவுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான சபை உறுதி செய்துள்ளது.
4 ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை அடங்கலாக ஏழு பேர் பிரேசில் செல்லவுள்ளனர். இவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை நிரந்தர வீடு ஒன்றை வழங்கியுள்ளது. சுமார் 45 இலங்கை அகதிகள் அடங்கிய படகு ஒன்று அவுஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டு துபாய் நோக்கி சென்றுக்கொண்டிருக்கையில் சிங்கப்பூர் கப்பல் ஒன்றினால் காப்பாற்றப்பட்டனர்.
பின்னர் அவர்கள், ஜெபால் அலி விமானத்தளத்தில் தங்க வைக்கப்பட்டு ஐக்கிய நாடுகளின் அகதி அந்தஸ்தும் கிடைக்கப்பெற்றது. இந்தநிலையில் கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் அமெரிக்கா, பின்லாந்து போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டனர்.
இந்தநிலையிலேயே கடைசியாக எஞ்சியிருந்த 7 இலங்கையர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை பிரேசிலுக்கு செல்லவுள்ளனர்.