கேள்விக்குறியாகியுள்ள ஷேவாக், கம்பீரின் கிரிக்கெட் எதிர்காலம்!!

382

sehwag_gambhir

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ஷேவாக், கம்பீரின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விகுறியாகி விட்டது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மூத்த வீரர்கள் 36 வயதான ஷேவாக், 33 வயதான கௌதம் கம்பீர், 36 வயதான ஜகீர்கான் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்படவில்லை.

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர் தொடங்க இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், அதற்கு தயாராவதற்கு இந்த அவுஸ்திரேலிய தொடர் தான் அச்சாரமாகும்.

மோசமான ஆட்டங்களால் கழற்றி விடப்பட்ட இவர்களது இடத்தை இப்போது இளம் வீரர்கள் முழுமையாக ஆக்கிரமித்து விட்டனர்.

ஒரு காலத்தில் ஷேவாக்– கம்பீர் உலகின் சிறந்த தொடக்க ஜோடியாக வலம் வந்தது. தற்போது தொடக்க வரிசையில் ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, ரஹானே, முரளி விஜய் போன்ற வீரர்கள் மாற்றி மாற்றி பயன்படுத்தப்படுகின்றனர்.

ஷேவாக் கடைசியாக 2013ம் ஆண்டு மார்ச் மாதம் டெஸ்டில் விளையாடியிருந்தார். காயத்தால் அவதிப்படும் ஜகீர்கானின் நிலைமையும் இதே தான்.

இவ்வாறு மூத்த வீரர்கள் தொடர்ச்சியாக ஓரங்கட்டப்படுவதால் 2015ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டித்தொடரில் விளையாட வாய்ப்பில்லை என்று அடித்து சொல்லப்படுகிறது.

உலகக்கிண்ண போட்டி நெருங்கி விட்டதால் இனி அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்ய இந்திய அணித்தலைவர் டோனி ஒரு போதும் விரும்பமாட்டார்.

அது மட்டமின்றி இவர்களது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையே அவ்வளவு தான். இனி அணிக்குள் வரவே முடியாது என்ற கோணத்திலும் விமர்சிக்கப்படுகிறது.