நடிகர் ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!

409

Rajani

கதையை திருடிய குற்றத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மதுரை உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மதுரை சின்னசொக்கிகுளத்தை சேர்ந்த கே.ஆர்.ரவிரத்தினம், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், நான் பல ஆண்டுகளாக சின்னத்திரை இயக்குநராக உள்ளேன். முதல்முறையாக ‘முல்லைவனம் 999’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளேன்.

இப்படம் முல்லைப் பெரியாறு அணை, அந்த அணையைக் கட்டிய பென்னிகுக்கின் வரலாற்றின் பின்னணியைக் கொண்டது. புதிய திரைப்படங்கள் தயாரிக்கப்படும்போது, வேறு யாரும் உரிமை கொண்டாடாமல் இருப்பதற்காக படத்தின் கதையை சமூக வலைத்தளமான யூ டியூப்பில் பதிவேற்றம் செய்வது வழக்கம்.

அதன்படி, ‘முல்லைவனம் 999’ கதையை 24.2.2013ல் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்தேன். கடந்த 10 மாதங்களாக மதுரை, கேரளா, தேனி பகுதிகளில் படத்தின் முன்னோட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், 2.5.2014ல் யூ டியூப்பில் எனது ‘முல்லைவனம் 999’ கதை, ‘லிங்கா’ என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. ‘முல்லைவனம் 999’ படத்தின் கதையை யூ டியூப்பில் இருந்து திருடி, ‘லிங்கா’ படத்தை தயாரித்துள்ளனர்.

எனவே, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லிங்கா படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். லிங்கா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. உடனடியாக தடைவிதிக்க மறுத்த நீதிபதி, மனு குறித்து தமிழக டிஜிபி, தென் மண்டல ஐஜி, மதுரை பொலிஸ் கமிஷனர், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செயலர், மத்திய அரசு சினிமா பிரிவு முதன்மை தயாரிப்பாளர், லிங்கா படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்குமார், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 19ம் திகதிக்கு தள்ளிவைத்தார்.