இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து இந்திய மீனவர்கள் குறித்து இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐந்து மீனவர்களையும் மன்னிப்பு வழங்கி விடுவிக்கத் தயாராக இருப்பதாக, பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ள நிலையில் மொஹான் சமரநாயக்க இதனைத் தெரிவித்ததாக என இந்திய ஊடகச் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்கள் தரப்பில் இருந்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
அதன்பின்னர் மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பிரபா கணேசன் மேன்முறையீடு செய்யாதிருந்தால் மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுவிக்கத் தயாராகவிருப்பதாக, ஜனாதிபதி குறிப்பிட்டார் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
எது எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து இது குறித்த உத்தியோகபூர்வ செய்திகள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.